தொலைந்து போன திறமைகள்
இப்பதிவில் நான் குறிப்பிடப்போகும் திறமைகள் என்னிடம் மெதுவாக ஒட்டிக் கொண்டத் திறமையோ, என்னையறியாமலே வந்த திறமையோ, எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே இருந்த திறமையோ அல்ல.
எங்கள் வீட்டுக்கருகில் இருக்கும் மளிகைக் கடையில் பெரிய லிஸ்டைக் கொடுத்து சாமான்களை எடுத்து, அவற்றுக்கு பில் போடும்போது கடைக்காரர் ஒவ்வொரு பொருளுக்குமான தொகைகளை எழுதும்போதே நான் அவற்றை மனதிலேயே ஒன்றன் பின் ஒன்றாகக் கூட்டி விடுவேன். நான்கு/மூன்றிலக்கத் தொகைகளை சுலபமாகவே கூட்டிட இயலும். எல்லாவற்றையும் எடுத்து எழுதி அவர் கால்குலேட்டரை எடுக்கும்போது மொத்தத் தொகையையும் முதலிலேயே கூறி விடுவேன். அவர் கூட்டி முடித்துப் பார்த்தால் கிட்டத்தட்ட 100% சதவிகிதம் நான் சொன்னதுதான் வந்திருக்கும். சில சமயம் சரியாக வராமல் போவது அவர் எழுதும் எண்களை மாற்றிப் படிப்பதால் வரும். உதாரணத்துக்கு சிலர் 4 என எழுதுவது 9 போலத் தோன்றும் அபாயம் உண்டு.
நான் கடைக்கு சென்றால் இதை நாங்கள் எல்லோருமே ஒரு விளையாட்டாகவே பாவிப்போம். இதில் என்ன திறமை வந்தது என்றால், மனதுக்குள்ளேயே கணக்கு போடும் திறமைதான். நாங்கள் பள்ளீயில் படிக்கும்போது 4 மற்றும் ஐந்தாம் வகுப்பில் மனக்கணக்குகளை அதிகம் போடச் சொல்வார்கள். பிறகு நான் மேல் வகுப்புகளுக்கு சென்றபோது அந்த பழக்கமே கிட்டத்தட்ட அழிந்தது எனக் கொள்ளலாம்.
இப்போதெல்லாம் எல்லாவர்றுக்கும் கால்குலேட்டரையே எடுக்கிறார்கள். நான் பார்த்த ஒரு பிரெஞ்சு பிரகஸ்பதி 10 + 2 = 12 என்பதற்கும் கால்குலேட்டரைத் தேடியதை என்னால் இன்னும் மறக்கவியலவில்லை. சிலர் கூறலாம் கால்குலேட்டர்கள் இருக்கும்போது ஏன் மண்டையை உடைத்துக் கொள்ளவேண்டும் என. அவர்கள் இந்தத் திறமையின் மிகச்சிறந்த அனுபவத்தையே இழக்கிறார்கள் என்பேன். நாங்கள் அக்காலத்தில் லாகரிதம் எல்லாம் கற்றோம். இப்போதும் அதைக் கற்பிக்கிறார்கள் என நினைக்கிறேன். சமீபத்தில் 1990-91 கல்வியாண்டில் இரு ஒன்பதாம் வகுப்பு மாணவிகளுக்கு நான் கணக்கு சொல்லிக் கொடுத்த போதும் அது இருந்தது, இன்று இன்னும் இருக்கிறது என நம்ப விரும்புகிறேன்.
பொருளாதார நிர்ப்பந்தங்களால் பல திறமைகள் தேவையின்றியும் போயுள்ளன. அவற்றில் முக்கியமானது நல்ல கையெழுத்துடன் எழுதுவது. அக்காலங்களில் பத்திரங்கள் எழுத நல்ல காப்பி ரைட்டர்கள் தேவைப்பட்டனர். ஆனால் இப்போது அவர்களுக்கு தேவையின்றி கணினி ஃபாண்டுகள் வந்து விட்டன. பாட்டுகளை கம்போசிங் செய்வதிலும் கணினியின் உபயோகம் வந்துள்ளதக அறிகிறேன்.
இவை எல்லாம் நல்லதுக்கா இல்லையா என்பதை எளிதாகக் கூறிவிட முடியாது. பொருளாதார மாறுதல்கள் சில திறமைகளைத் தேவையில்லாமல் ஆக்கினாலும் நான் முதலில் கூறிய மனக்கணக்கு திரமைகள் மாணவர்களிடம் இல்லாமல் போவது நல்லதுக்கல்ல என்றே கூறுவேன். ஆகவே மாணவர்களிடம் எடுத்த எடுப்பிலேயே கால்குலேட்டர்கள தராது பார்த்துக் கொள்ள வேண்டும்.
நான் வழக்கமாக பத்திரிகைகள் வாங்கும் கடை முதலாளிக்கு பத்தாம் வகுப்பில் படிக்கும் ஒரு சுட்டிப் பெண் இருக்கிறாள். அக்குழந்தையை நான் அவளது ஐந்தாம் வகுப்ப்லிருந்தே கவனித்து வருகிறேன். நான் 100 ரூபாயைக் கொடுத்து 34.50 க்கு பத்திரிகைகள் எடுத்திருப்பதாகக் கூறினால், அந்த சுட்டிப் பெண் மீதி 65.50 என்பதை ஆங்கிலத்தில் உரக்கக் கூறிவண்ணம் சரியான சில்லறை தருவாள். அவள் பெற்றோகளோ முதலில் ஐம்பது பைசாவை எடுத்து 35 எனக்கூறிவிட்டு, 5 ரூபாயை எடுத்து 40 எனக்கூறி, பிறகு முறையே 10 மற்றும் ஐம்பது ரூபாய் நோட்டுக்களை சேர்த்து 100 எனக் கூட்டி நம்மிடம் தருவார்கள். சில்லறை நோட்டுகள் கைவசம் ரெடியாக இல்லாவிட்டால் கால்குலேட்டரே துணை. தென்றல் என்னும் பெயருடைய அந்தச் சுட்டிப் பெண் ஆறாம் வகுப்பிலேயே கணக்குக்கான ஒலிம்பியாட்டில் கலந்து கொண்டு மூன்றாம் பரிசு பெற்றவள். சகபோட்டியாளர்கள் பலர் அச்சமயம் அவளை விட 4 அல்லது 5 வயது பெரியவர்கள்.
இந்தச் சுட்டிப் பெண் போல குழந்தைகள் இருக்கும்வரை நமது இளைய சமுதாயத்தின் மேல் உள்ள எனது நம்பிக்கை குறையாதுதான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக